சேலம் ரயில்வே கோட்டம் மற்றும் கோயம்புத்தூர் ரயில் நிலையம் சார்பில் முன்பதிவில்லாத ரயில்களுக்கான பயணச்சீட்டு எடுக்கும் Unreserved Ticketing System (யூ.டி.எஸ் ) எனும் மொபைல் செயலியை பிரபலப்படுத்த 'ஒரு நிமிட வீடியோ சேலஞ்ச்' எனும் போட்டி நடத்தப்பட உள்ளது.

இதில், சிறந்த வீடியோவாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.இப்போட்டி குறித்த அறிமுக நிகழ்வு மற்றும் யூ.டி.எஸ் மொபைல் செயலி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இதில், கோவை ரயில் நிலைய இயக்குனர் சச்சின் குமார், வணிகப்பிரிவு துணை மேலாளர் சதீஷ் சகாதேவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

"நாட்டில் முதல்முறையாக யூ.டி.எஸ் மொபைல் செயலியை பிரபலப்படுத்தும் விதமாக ஒரு நிமிட வீடியோ சேலஞ்ச் போட்டி சேலம் ரயில்வே கோட்டம் மற்றும் கோவை ரயில் நிலையத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. இதில் எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம், என தெரிவித்தார்.

யூ.டி.எஸ்  மொபைல் செயலியின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், குறிப்பாக நீண்ட வரிசையில் காத்திருக்காமல் எளிதாக டிக்கெட் எடுக்கும் முறை குறித்தும் சிறப்பான முறையில் 1 நிமிட பதிவாக அனுப்பப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும். அதில் அதிக பார்வைகளைப் பெறும் வீடியோக்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான கடைசி நாள் மார்ச் 31 ஆகும். இதற்கான க்யூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து போட்டியாளர்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். எந்த மொழியிலும் வீடியோ உருவாக்கி அனுப்பலாம்.

யூ.டி.எஸ் மொபைல் செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்த போதும் அதன் பயன்பாடு குறைவாக இருப்பதால், அதனை பிரபலப்படுத்தும் விதமாக சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் இப்போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.