கோவை மாநகர் உக்கடம் சி.எம்.சி காலனி பகுதியில் பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு உக்கடத்தில் உயர் மட்ட மேம்பாலம் பணிகள் துவங்க உள்ளதாக கூறி உக்கடம் பெரியகுளத்திற்கு எதிர்ப்புறம் இயங்கி வரும் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்திவிட்டு மீதி உள்ள இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

18 மாதங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது நான்கு வருடங்கள் ஆன நிலையிலும் உக்கடம் மேம்பால பணிகள் 90 சதவீதத்திற்கும் மேல் முடிக்கப்பட்டுள்ள நிலையிலும் தற்பொழுது வரை அப்பகுதியில் இயங்கி வரும் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் பல நாட்களாக வாடகை வீடுகளில் வசித்து வருவதாகவும் எனவே விரைவில் அந்த மீன் மார்க்கெட் அப்புறப்படுத்தி விட்டு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.