Update: இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதிக்கு ரூ. 1 லட்சம் பிணைத்தொகையுடன் பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சனாதனம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில், பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஆஜராகியுள்ளார். 

2023 செப். 2ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதனம் ஒழிப்பு மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சா் உதயநிதி பேசியிருந்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்த பேச்சுக்கு எதிராக பரமேஷ் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஆஜராகியுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசா ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.