உழவர் பெருந்தலைவர்  என்றழைக்கப்படும் கோவையை சேர்ந்த சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் அமைந்துள்ள அவரின்   நினைவிடத்தில் அவர் திருவுருவச்சிலைக்கு, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதற்கடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:

ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் நூற்றாண்டையொட்டி இன்று அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க தனது இறுதி மூச்சு வரை விவசாயிகளுக்கு குரல் கொடுத்தவர். வட்ட அளவில் துவங்கிய விவசாயிகள் அமைப்பை, அதன்பிறகு அகில இந்திய அளவில் துவங்கி, தன்னுடைய ஆளுமை திறனால் விவசாய சங்கத்தை வலுவடைய செய்தார் நாராயணசாமி நாயுடு ஐயா.

விவசாயிகளை ஒன்று திரட்டி, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதை நிறைவேற செய்தவர். சில திட்டங்கள் நிறைவேறும்போது அவர் இல்லையே என்ற ஏக்கம் விவசாயிகளிடையே உள்ளது. குறிப்பாக, கலைஞர் அவர்கள் 3 வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற போது, நாராயணசாமியின் கோரிக்கையான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

இதேபோல், 5 வது முறையாக பொறுப்பேற்ற கலைஞர் ரூ.7000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். அந்த வகையில் ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் கோரிக்கைகளை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றி வைத்துள்ளார்.

திமுகவுடன் கூட்டணி வைத்து களம் கண்டவர் நாராயணசாமி ஐயா அவர்கள். அவர் புகழ் ஓங்க வேண்டும் என அவரது குடும்பதினரின் கோரிக்கையை ஏற்று, திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாராயணசாமி ஐயா பிறந்த ஊரான வையம்பாளையத்தில் நூற்றாண்டு வளைவு அமைக்கவும், துடியலூர் அருகே என்ஜிஜிஓ காலனி இரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டவும் அறிவிப்பு வெளிட்டுள்ளார்.

மேலும், அவரது குடும்பத்தினர்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதை முதல்வரின் கவனத்திற்கு, நானும், மின்சாரத்துறை அமைச்சர் அவர்களும் எடுத்துச்சென்று நிறைவேற்றி தர உறுதி அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.