ஜூலை மாதத்திற்கு மேல் கடை மற்றும் நிறுவனங்கள் தொடங்கிய உரிமையாளர்கள் பதிவு செய்வதற்கான அறிவிப்பை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1947-ம் வருட தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான 2018-ஆம் ஆண்டு சட்ட திருத்தம் (சட்ட -27/2018) மற்றும் 2023 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் (சட்ட எண்.(21/2023) மூலம் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அசாதாரண அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்திருத்தம் அமலுக்கு வரும் நாள் 02.07.2024 எண் அரசால் அறிவிக்கை செய்யப்பட்டு அசாதாரண அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள 02.07.2024-க்கு பின்னர் புதிதாக தொடங்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை இத்துறையின் இணையவழி தளத்தில் https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் Form Y-ல் பதிவுக்கட்டணம் ரூ.100/-ஐ செலுத்தி ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவுச் சான்றிதழ் படிவம் Z-ல் இணையவழி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு 24 மணி நேரத்திற்குள் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும்.

10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு கட்டணம் ஏதுமின்றி இத்துறையின் மேற்குறிப்பிட்டுள்ள இணையவழி முகவரியில் தங்களது கடைகள்/நிறுவனத்தின் விபரங்களை அறிவிப்பு (Intimation) படிவம் ZB-ல் ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதனை சரிபார்த்தவுடன் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் படிவம் Z-ல் பதிவுச் சான்றிதழ் இணையவழி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவுச் சான்றிதழில் திருத்தங்கள் செய்ய மேற்குறிப்பிட்டுள்ள இணையவழி முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆய்வரால் படிவம் Z-ல் திருத்தங்கள் அடங்கிய புதிய பதிவுச் சான்றிதழ் இணையவழி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி கடைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, அறிவிப்பு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News by Thirusounder