கோவை நவ இந்தியாவில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், போதைப்பொருள் தடுப்புக்குழு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை, கல்லூரி வளாகத்தில் இன்று (26.06.2024) நடத்தியது.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். சுந்தர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர். பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்விற்கு கோவை மாநகர சிங்காநல்லூர் சரக உதவி காவல் ஆணையர் பி.பார்த்திபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும்போது, "மாணவர்கள் இன்று உலக நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துக் கொள்கிறீர்கள். போதைப்பொருட்களால் உடலுக்கும், சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நன்கு அறிவீர்கள். சமுதாயத்தில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்க உறுதியேற்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வான் வாசிக்க, மாணவர்கள், பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினர்.

இதற்கான ஏற்பாடுகளை போதைப்பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் த.சத்தியசீலன், முனைவர் பிரேம்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அ.சுபாஷினி, முனைவர் ஆர்.நாகராஜன், முனைவர் ஏ.சஹானா பாத்திமா, முனைவர் யு.பிரவீன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.