கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஒவ்வொரு நாளும் ரூ.25 முதல் 30 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பூபதி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 2022ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்த கூலியை பெற்று தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றனர். தங்களுக்கு கூலியை உயர்த்தி வழங்கவேண்டும் என கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக அவர்கள் 
வலியுறுத்தி வருவதாகவும் தற்போது வரை இதற்காக 10 முறை பேச்சு வார்த்தை நடைபெற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது. 

கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 1 வார காலமாக வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்களுடன் கோவை மாவட்டகலெக்டர் பவன்குமார் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையில் அன்னூர், தெக்கலூர், சோமனூர், கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விசைத்தறி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பூபதி, தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை மூடி வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,  கூலி உயர்வு இருந்தால் மட்டுமே விசைத்தறி துறைகளை காப்பாற்ற முடியும் என்று மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தியிருப்பதாகவும், 2022 ஒப்பந்த கூலியிலிருந்து எங்களுக்கு 50% முதல் 60% கூலி உயர்வு வேண்டுமென்று கோரிக்கை விடுதிருப்பதாக தெரிவித்தார். இந்த கோரிக்கைகளை அவர் பரிசீலிப்பதாக கூறியதாக தெரிவித்தார். 

மாவட்ட நிர்வாகம், விசைத்தறி துறை, ஜவுளி துறை ஆகியவற்றை இணைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.