அவிநாசி சாலை வழியே 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்துவரும் பிரம்மாண்ட மேம்பாலத்தின் கட்டுமானப்பணிக்கு உதவிடும் வகையில் கடந்த மார்ச் மாதம் பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி இடையே 2007ல் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்த பி.எஸ்.ஜி. நடைமேம்பாலம் அகற்றப்பட்டது.

2 பி.எஸ்.ஜி. கல்லூரிகளுக்கும் விடுதி ஒரே இடத்தில் இருப்பதால், மாணவர்கள் எளிதில் சாலையை கடந்து செல்ல இந்த பாலம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்துவந்தது.

பொது மக்களும் இதை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அது அகற்றப்பட்ட பின்னர் மாணவர்கள் சாலையை கடப்பதில் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இப்போது அந்த வழியே அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு தேவயான தூண்கள் அமைக்கப்பட்டு மேலே டெக் ஸ்லாப் எல்லாம் அமைக்கப்பட்டு விட்டதால், அதே இடத்தில் மேம்பாலத்திற்கு சற்று கீழே மீண்டும் பி.எஸ்.ஜி. நடை மேம்பாலம் அமைகிறது. 

இதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளது. முன்பிருந்த வடிவம் போல இல்லாமல் புது வடிவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த நடைமேம்பாலம்.

இதன் ஒரு பாதி பகுதி பொருத்தப்பட்டு வருகிறது. விரைவில் முழுவதுமாக நடைமேம்பாலம் பொருத்தப்பட்டு மாணவர்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.