கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு மாவட்ட வருவாய் துறையை கையகப்படுத்த உத்தரவிட்ட மொத்தம் 635.33 ஏக்கர் நிலத்தில் சுமார் 558 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஏற்கனவே கையகப்படுத்தி வைத்து உள்ளது.

மீதம் இருந்த நிலங்களை முதலில் டிசம்பர் 2023க்குள் கையகப்படுத்தி முடிதிட்ட திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு நிலங்களை கையகபடுத்த முடியாமல் போனதால் 31 மார்ச் 2024ல் இந்த பணியை முடிக்க முடிவு செய்யப்பட்டது.

அப்போதைய நிலவரப்படி 30 ஏக்கர் நிலம் தான் மீதம் இருந்தது. இதை கையகப்படுத்தி, இந்த பணியை நிறைவு செய்ய நடவடிக்கைகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் தமிழகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து அதற்கு தேவையான பணிகளை செய்ய அதிகாரிகள் கவனம் செலுத்தி வந்ததால் மார்ச் மாதத்திலும் நிலம் கையகப்படுத்தும் பணி முழுவதுமாக நிறைவேறாமல் இருந்தது.

அப்போது வெறும் 14 ஏக்கர் நிலங்களையே கையகப்படுத்த வேண்டியுள்ள நிலை இருப்பதால் இந்தப் பணியை மே 15 ஆம் தேதிக்குள் முடித்திட முயற்சிகள் நடைபெற்றன. மீதமுள்ள 14 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலம் ரிசர்வ் நிலம் என்பதால் அதை வருவாய் துறை கட்டணம் எதுவும் இன்றி விரைந்து கையகப்படுத்தி விடும். மீதம் வெறும் 4 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்த வேண்டிய நிலை இருக்கும் என்பதால் அதை கையகப்படுத்துவதற்கு கால தாமதம் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது எனவும் அண்மை தகவல்கள் படி இந்த பணிகள் இம்மாதம் (ஜூன்) இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக நில கையகப்படுத்தும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தமிழக அரசின் நிபந்தனைகளை இந்திய விமான நிலைய ஆணையம் ( Airport Authority of India) ஏற்றால், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்குள் வந்து விரிவாக்க பணிகளை துவங்கலாம் என செப்டம்பர் 2023லேயே மாநில அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுவரை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள எந்த நிலத்தையும் இந்திய விமான நிலைய ஆணையம் எடுத்துக்கொள்ளவில்லை. தமிழக அரசு முன்வைத்துள்ள நிபந்தனைகளை அது ஏற்கவில்லை என்பதே இதற்கு காரணம். 

தமிழக அரசு கையப்படுத்தியுள்ள நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையம் கோவை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கும் நவீனமயம் செய்யும் பணிகளுக்கும் மட்டும் பயன்படுத்தலாமே தவிர அதுகுறித்த நிலையான ஒப்பந்தம் தமிழக அரசு மற்றும் விமான நிலைய ஆணையமிடம் இறுதியாகும் வரை அதன் உரிமை யாருக்கும் மாற்றி தரப்படாது, நிலங்கள் வேறு எந்த நிறுவனத்துக்கும் குத்தகைக்கு விட அனுமதியும் வழங்கப்படமாட்டாது, என்கிற நிபந்தனைகளை தமிழக அரசு முன் வைத்துள்ளது.

இந்நிலையில்,  ஜூன் 2ஆம் தேதி இதுபற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியானது. அதில், தமிழக அரசு இந்த விரிவாக்கம் தொடர்பான நிபந்தனைகளை தளர்த்த ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்டது. மேலும் ஜூன் 4ஆம் தேதிக்கு  பின்னர் இதுபற்றி மகிழ்ச்சியான தகவல் வெளியாகும் எனவும் கூறப்பட்டது. 

விரைவில் நல்ல தகவல் வெளியாகும் என விமான நிலைய விரிவாக்கம் மீது ஆர்வம் காட்டும் கோவை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.