அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தண்டனை கிடைக்கும் - கே.சி.பழனிசாமி
- by CC Web Desk
- Apr 15,2025
கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமியை,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியதாக அவர் கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை இன்று ஆஜராக கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் இன்று ஆஜரானார்.
இந்நிலையில் வழக்கு விசாரணையை மே 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் கே.சி.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அவதூறு வழக்கு குறித்து கருத்து தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், தன்னை "தெருவில் செல்பவர்" என கூறியதாக கே.சி.பழனிசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 3 வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், உயர் நீதிமன்றம் குற்ற வழக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தன்னை வேண்டுமென்றே அவதூறு செய்யும் வகையில் மீண்டும் பேசியதாக கே.சி.பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில், எடப்பாடி பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.ஆனால், சட்டமன்ற கூட்டத்தொடர் காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கில் உரிய தண்டனை வழங்கப்படும் என நம்புகிறேன் என கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.