கோவையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நகைகள் கொள்ளை! பல கோடி மதிப்பிலான நகைகள் பறிபோனதாக தகவல்
- by admin
- Nov 28,2023
கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது சம்பந்தமாக போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. 4 தளங்கள் கொண்ட இங்கு தங்க நகை, வைரம், பிளாட்டினம், வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சுவற்றில் பொருத்தி இருந்த ஏசி வென்டிலேட்டரை கழட்டி அதன் வழியே உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடிக்குள் இறங்கி அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கிலோ கணக்கில் தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று கடையை திறந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஊழியர்கள் ஏசி வெண்டிலேட்டரை கழட்டி அதன் வழியே புகுந்து தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஊழியர்கள் கடை மேலாளருக்கு தகவல் கொடுத்தனர் அவர் உடனடியாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார் சம்பவ இடத்துக்கு கோவை மாநகர தெற்கு போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
மேலும் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் ஏசி வெண்டிலேட்டர் கழட்டி உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே கொள்ளை போன நகைகளின் விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை நகைக்கடையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.