சென்னை, கோவையில் தலா 3 பேர் என தமிழகத்தில் மொத்தம் 6 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்படுவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது உண்மை என்றாலும், இதுபற்றி அச்சப்படும் படி எதுவும் நடைபெறவில்லை.

ஜூலை மாத துவக்கத்தில் (1.7.24 முதல் 4.7.2024 வரை) கோவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 0. ஜூலை 5 ஆம் தேதி 1 நபருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. 6ம் தேதி 0, ஆனால் 7 ஆம் தேதி 2 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் 8 ஆம் தேதி புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. 9 ஆம் தேதி 1 நபருக்கு தொற்று புதிதாக ஏற்பட்டது. 10,11, 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் யாருக்கும் புது தொற்று இல்லை. கோவையில் ஒருவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 14.7.2024 (நேற்று - ஞாயிறு) மற்றும் இன்று (15.7.2024) கோவையில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இது தமிழக அரசு வெளியிட்டதினசரி கொரோனா நிலவர அறிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்.

கோவையில் 3 பேர் தொற்று அறிகுறிக்காக சிகிச்சையில் உள்ளவர்கள் என வெளியானது ஏற்கனவே பாதிப்பில் இருப்பவர்கள் பற்றிய தகவல் மட்டுமே. இதை பரவல் என எடுத்துக்கொள்ள தேவையில்லை. தமிழகத்தின் 38 மாவட்டத்தில் எந்த மாவட்டத்திலும் அச்சுறுத்தலாக எதுவும் கண்டறியப்படவில்லை.

கொரோனா நிரந்திரமாக நம்மை விட்டு போகாது என்பதை ஆய்வாளர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டனர். தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் FLiRT எனும் ஓமிக்ரான் வகை கொரோனா பிரிவை சேர்ந்த வைரஸ் அங்கு தொற்றை அதிகப்படுத்தி வருகின்றது என்றாலும், இதனால் எந்த ஒரு அச்சப்படவேண்டிய தாக்கம் இந்தியாவில் கண்டறியப்படவில்லை.

மழை காலத்தில் உடல் ஆரோக்கியம் கருதி முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்லுங்கள். தொடர்ந்து சளி, காய்ச்சல் இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள். காய்ச்சல் இருந்தால் அச்சம் இல்லாமல்,பொறுப்புடன் செயல்படுங்கள்.