கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மேயரிடம் கோவை மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரில் வந்து வழங்க முடியும்.

இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குஉத்தரவு மேயரால் வழங்கப்படும் என்பதால் இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்குவர்.

தேர்தல் காரணங்களால் பல வார இடைவேளைக்கு பின்னர் கடந்த செவ்வாய் (18.6.24) இந்த கூட்டம் மேயர்  தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் 30 பேர் மனுக்களை வாங்கினர்.

இதற்கு அடுத்து நாளை (25.06.2024) இந்த கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணத்தால் நடைபெறாது என கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்   தெரிவித்துள்ளார்.