ஒருவழியாக நிறைவடைகிறது பெரியநாயக்கன்பாளைய மேம்பாலப் பணிகள்!
- by David
- Dec 07,2023
பல காரணங்களால் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாமல் நெடு நாட்களாக நடைபெற்று வந்த பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் தற்போது கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. வரும் 11.12.23 (திங்கள்) இந்த மேம்பாலத்தின் சோதனை ஓட்டம் நடத்திட தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
பெரியநாயக்கன்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அப்பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.115 கோடி மதிப்பில் 1,882 மீட்டர் தூரம் நீளம், 17.60 மீட்டர் அகலத்தில் 48 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட பணிகள் 2020 நவம்பரில் துவங்கியது.
பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி எல்.எம்.டபிள்யூ சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகியவற்றை கடந்து வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது. இந்த பாலத்தால் 3 சந்திப்புகளிலும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
மே 2022ல் இதை முடிக்க திட்டம் இருந்தது. ஆனால் பல காரணங்களினால் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த மேம்பாலத்தை கட்டி முடிக்க முடியாமல் பணிகள் நடைபெற்று கொண்டே இருந்தது. தற்போது இது நிறைவுக்கு வந்துள்ளது.