நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டுக்கான  கல்வி நிதி  தொடர்பாக தமிழக எம்.பி க்கள் கேள்விகளை முன் வைத்தனர்.

அதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழக எம்.பி க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள் என்று பேசினார்.

தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் பாராளமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தான் கூறிய கருத்து வருத்தமளிப்பதாக இருந்தால் அதை தான் திரும்ப பெறுவதாக அவர் கூறியநிலையில், அந்த பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவையில் தி.மு.க சார்பில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை முன்பு, மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, பெட்ரோல் ஊற்றி தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தி.மு.க வினர் பலர் கலந்து கொண்டனர்.