கோவையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நபர் மனமுடைந்து செய்த செயலால் பரபரப்பு!
- by CC Web Desk
- Mar 11,2025
கோவையில் வெறி நாய்க்கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவரை வெறி நாய் கண்டித்துள்ளது. இதற்காக முதலில் சிகிச்சை ஏதும் எடுக்காமல் இவர் இருந்துள்ளார்.
இந்த நிலையில், பாதிப்பு அதிகமானதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நாய்க்கடி சிகிச்சை வார்டில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனிடையே ராம் சந்தருக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மருத்துவமனையில் வளாகத்திலிருந்த நோட்டீஸ் போர்டின் கண்ணாடியை உடைத்தார். அதிலிருந்து விழுந்த கண்ணாடித் துண்டுகளில் ஒன்றை எடுத்து அதன் மூலம் தன்னை தானே கொடூரமாக தாக்கிக்கொண்டார்.
இதை கண்ட மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யவேண்டும் எனவும் சாலையில் தெருநாய்களால் தொல்லை ஏற்பட்டால் மாநகராட்சி அதுகுறித்து வேகமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.