கோவையில் சாலை விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது எல் & டி பைபாஸ் சாலை.

27.2 கிலோமீட்டர் நீளத்துக்கு நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள இந்த சாலையை எல் & டி எனும் தனியார் நிறுவனம் பராமரித்து வருகின்றது. 2031 வரை இந்த சாலையை அந்நிறுவனம் பராமரிக்கும்.

ஆயிரக்கணக்கான லாரிகள் தினமும் இந்த சாலை மூலமாக கேரளா, பெங்களூரு மற்றும் சென்னைக்கு செல்கின்றனர். இந்த முக்கிய சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதால் இதை விரிவாக்கம் செய்யவேண்டும் என வேண்டுகோளை பல ஆண்டுகளாக மக்கள் முன்வைத்து வருகின்றனர். 2022ல் 55 வாகன ஓட்டிகள் இங்கு சாலைவிபத்துக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டில் இது 120 ஆக அதிகரித்தது.

இந்த சாலை குறுகலாக இருப்பதாலும், நடுவே டிவைடர் இல்லாததாலும் வாகனங்களில் வருவோர் முன்னர் செல்லும் வாகனங்களை முந்த முயல்கையில் விபத்துகள் நேர்வதாக கருதப்படுகிறது.

மாநில அரசோ அல்லது சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமோ இதை 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்தால் தான் இந்த விபத்துக்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் இரண்டு வழி சாலையாக உள்ள எல் & டி பைபாஸ் சாலையை 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை கொண்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோவை சரக காவல்துறை சார்ந்த தகவல்கள் படி, இந்த விரிவாக்கத்திற்கான தனி மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் என கூறப்பட்டது.  

இதையடுத்து தற்போது தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் எல் &டி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இடையே இந்த சாலையை அகலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருகிறது.