வரும் பட்ஜெட்டிலாவது தொழில்துறை விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-

 

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முத்ரா கடன்களுக்கான உச்ச வரம்பு ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

 

நெருக்கடிக் காலத்தில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் கடன் வழங்கும் அளவு ரூபாய் 100 கோடியாக அதிகரிக்கப்படும்.

 

தொழில் முனைவோர்களுக்கு அவர்களது தொழில் வளர்ச்சி மற்றும் அவர்கள் வாங்கும் சொத்து மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் மதிப்பீடு செய்யப்படும்

 

வரும் காலங்களில் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும், அதன் முதல் கட்டமாக 12 இடங்களில் தொழிற் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும்.

 

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் தொழிலாளர் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.

 

பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும்.

 

இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 1000 தொழிற் பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்.

 

தாயிரம், இரும்பு உள்ளிட்ட 20 வகையான ஸ்கிராப் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை காட்மா சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

 

அதே நேரத்தில் நுகர்வோர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் வரிவிகிதக்குறைப்பு, வங்கிக் கட்டண விகிதங்களில் குறைப்பு, நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் மூலப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்தல் ஆகிய அறிவிப்புகளை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றித்தந்து தொழில்முனைவோர்களுக்கு உதவ வேண்டுமாய் காட்மா சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

 

இவ்வாறு காட்மா சிவக்குமார் தெரிவித்துள்ளார்.