நகை பட்டறையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் திருடியவர் கைது!

கோவை கெம்பட்டி காலனி, பாளையம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி. இவர் வீட்டின் ஒரு பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு செல்வபுரம் எல்.ஐ.சி காலனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் சரவணமூர்த்தி 200 கிராம் தங்க கட்டிகளை கார்த்தியிடம் கொடுத்து ஆபரணமாக செய்யுமாறு கூறி உள்ளார். அதை வாங்கிச் சென்ற அவர் வெகு நேரமாகியும் பட்டறைக்கு திரும்பவில்லை. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சரவணமூர்த்தி அவரைத் தேடி வீட்டுக்குச் சென்றார். அங்கு அவர் இல்லை. இதனால் அவர் தங்க கட்டிகளை திருடி விட்டு மாயமானது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் பெரிய கடை வீதி போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் கார்த்தியின் செல்போனில் ஆய்வு செய்த போது அவர் புதுச்சேரியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த கார்த்திகை மடக்கிப் பிடித்து கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

96 வயதான தந்தையை ஏமாற்றி சொத்தை அபகரித்த மூத்த மகன்... ஆம்புலன்ஸில் அழைத்து வந்து புகார் அளிக்க செய்த இளைய மகன்!

கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96 வயதான பழனிச்சாமி. இவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் சரஸ்வதி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும் நிலையில் இவர் சூலூர் பகுதியில் தனியாக இல்லத்தில் வசித்து வருகிறார். ஜெயக்குமார் இவரது இல்லத்தின் அருகில் வேறொரு இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சரஸ்வதி வேறு இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பழனிச்சாமிக்கு சொந்தமான சுமார் 2.1/4 செண்ட் நிலத்தை ஜெயக்குமார் தங்களுக்கு எழுதி தர வேண்டுமென முதியவர் பழனிச்சாமியை மிரட்டியதாகவும் உணவையும் சரிவர அளிக்காமல் சித்தரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பழனிச்சாமியை மகள் சரஸ்வதி அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று கவனித்து கொண்டுள்ளார்.

சிறிது நாட்களில் சரஸ்வதிக்கு இல்ல பராமரிப்பு பணிகள் இருந்ததால் மீண்டும் பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கே அழைத்து வந்து விட்டுள்ளார். இதனிடையே ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் கீர்த்தனா மோசடி செய்து அந்த இடத்தை வாங்கிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பழனிச்சாமியின் இளையமகன் வேல்முருகன் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து மோசடி செய்து அவர்கள் வாங்கி கொண்ட நிலத்தை மீட்டு தர வேண்டும் என புகார் மனு அளிக்க செய்தார்.