விடுதியில் முதலாம் ஆண்டு மாணவரை தாக்கிய 3 பேர் கைது

கோவை, ரேஸ் கோர்ஸ் பூங்கா அருகில் பாலசுந்தரம் ரோட்டில் அரசு கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவை அரசு மாணவர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி விடுதியில் உள்ள அறையில் மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கும்பாரஹல்லி பகுதியைச் சேர்ந்த பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் தாக்கப்பட்டார்.

விடுதியில் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாறுவது தொடர்பாக பொருட்களை காலி செய்யும் பிரச்சனையில் இந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது விடுதியில் குளியலறையில் இருந்த முதலாம் ஆண்டு மாணவரை 3 மூத்த மாணவர்கள் தாக்கி உள்ளனர்.

இதில் காயம் அடைந்த மாணவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு இது தொடர்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சினிமா பாணியில் நடைபெற்ற ஆள்கடத்தல் சம்பவம் ! 3 பேர் கைது

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு அவரது தோழி மூலம் சூர்யா என்பவர் அறிமுகமானார். தோழியின் நண்பர் என்பதால் கல்லூரி மாணவி அவருடன் பேசி வந்துள்ளார்.  இந்த நிலையில் ஒருநாள் சூர்யா கல்லூரி மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் உன்னை நான் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

சூர்யாவிடம் தனக்கு படிப்பு தான் முக்கியம், காதலிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார். அதன் பிறகு சூர்யா அவரை தொடர்பு கொள்ள செல்போனில் தொடர்பு கொள்ள முயன்று உள்ளார். இதனால் கல்லூரி மாணவி சூர்யாவின் நம்பரை" பிளாக் "செய்து விட்டார்.

செல்போனில் நம்பரை பிளாக் செய்து விட்டதால் மாணவியை சூர்யா அடிக்கடி கல்லூரி அருகில் நேரில் வந்து காதலிக்கும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மாணவி தனது சகோதரர் பிரவீன் குமாரிடம் கூறி அழுது உள்ளார். அவர் இதுகுறித்து சூர்யாவிடம் தட்டி கேட்பதாக கூறி தைரியம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மாணவி அவரது தோழியுடன் கல்லூரி முடிந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சூர்யா வந்து மாணவியிடம் மீண்டும் தன்னை காதலிக்கும்படி கூறி வற்புறுத்தியுள்ளார். இதனால் மாணவி செல்போனில் தனது அண்ணனை தொடர்பு கொண்டு பேசினார். உடனே சம்பவ இடத்திற்கு அண்ணன் பிரவீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் விரைந்து வந்தனர்.

சூர்யாவிடம் ஏன் தனது சகோதரியிடம் தகராறு செய்கிறாய் என்று பிரவீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது பிரவீன் குமார் உடன் வந்த அவரது நண்பர் தருண் என்பவர் சூர்யாவை கடுமையாக பேசி எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் சூர்யாவின் ஆத்திரம் தருண் மீது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 20 ஆம் தேதி, மாணவியின் அண்ணன் பிரவீன் குமார் போத்தனூர் ரயில்வே திருமண மண்டபம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை சூர்யா அவரது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு மாணவியை தொடர்பு கொண்ட சூர்யா," நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், நான் உனது சகோதரன் பிரவீன் குமாரை கடத்தி வைத்துள்ளேன். மேலும் பிரவீன் குமாரின் நண்பன் தருணை என்னிடம் அழைத்து வந்து ஒப்படைத்து விட்டு உனது சகோதரன் பிரவீன் குமாரை திரும்ப அழைத்துச் செல்," என்று கூறிவிட்டு ஃபோனை கட் செய்துவிட்டார். 

இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். உடனே தருணை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை மாணவி கூறி அழுது உள்ளார். அதன் பிறகு சூர்யா கூறியபடி மாணவி, தருணை அழைத்துக் கொண்டு சூர்யா குறிப்பிட்ட செட்டிபாளையம், பேக்கரி கடைக்கு சென்றனர்.

அப்போது மாணவி மற்றும் தருண் உடன் பாதுகாப்புக்கு மனைவியின் உறவினர் விஜய் , தருணின் நண்பர் ஆகியோரும் சென்றனர். சூர்யா கூறிய பேக்கரிக்கு அருகில் சென்றதும் சூர்யா மாணவியை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ஒரு காரின் நம்பரை கூறி அந்த காரை பின் தொடர்ந்து வரும்படி கூறியுள்ளார். அந்த காரில் தான் அவரது சகோதரர் பிரவீன் குமார் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மாணவி மற்றும் தருண் சூர்யா கூறிய காரை பின் தொடர்ந்து சென்றனர். செட்டிபாளையம் ரோட்டில் சிறிது தூரம் சென்றதும் சூர்யா காரை நிறுத்தியுள்ளார். அதன் பிறகு மாணவியிடம் தருணை தன்னிடம் அனுப்பி வைக்கும் படியும் அதன் பிறகு உனது சகோதரன் பிரவீன் குமாரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.

சினிமாவில் வரும் சம்பவம் போன்று நடப்பதை பார்த்த மாணவி மற்றும் அவரடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சூர்யா தருணை தன்னிடம் அனுப்பி வைக்காவிட்டால் காரில் இருக்கும் பிரவீன் குமாரை கொன்று விடுவதாக கூறி மிரட்டி உள்ளார். இதைக் கேட்டு மாணவி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு உள்ளார். இதனால் அங்கு ஏராளமானவர்கள் கூடி விட்டனர்.அதன் பிறகு சூர்யா மற்றும் அவருடன் வந்தவர்கள் பிரவீன் குமாரை காரில் இருந்து இறக்கி விட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

நேற்று காலை கடத்தப்பட்ட பிரவீன் குமார் நள்ளிரவில் இறக்கி விடப்பட்டுள்ளார். அப்போது காருக்குள் பிரவீன் குமாரை, காரில் இருந்த சூர்யாவின் நண்பர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக சூர்யாவின் நண்பர்கள் வெள்ளலூர் ரோடு கலையரசன் (வயது 19), சிங்காநல்லூர் கோத்தாரி மேல் தெரு சங்கர் (வயது 21), சிங்காநல்லூர்,வெள்ளலூர் ரோடு திருமுருகன் (வயது 21) ஆகியோரை கைது செய்தார். தப்பி ஓடிய சூர்யாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஹவாலா பணம் ரூ. 71.50 லட்சம் பிடிப்பட்டது

பாலக்காடு, வாளையாறு சுங்கச் சாவடியில் அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவினர் நடத்திய வாகன சோதனையில், ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட ரூ. 71.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த டி.கே. சிவபிரசாத் (வயது 59) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

'ஆப்பரேஷன் கிளீன் ஸ்லேட்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலையில் கலால் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தனியார் பேருந்தில் பயணம் செய்த சிவபிரசாத், காகிதங்களுக்கு அடியில் மறைத்து வைத்து இருந்த பையில் இருந்து இந்த பணம் கண்டெடுக்கப்பட்டது. இது சட்டவிரோதமான பணம் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆந்திராவில் இருந்து கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த பணம், விமான நிலையத்தில் சிக்கி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் கைது செய்யப்பட்ட சிவபிரசாத் ஆகியோர் விசாரணைக்காக வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். பாலக்காடு வருமான வரித்துறை ஆய்வாளர் வினோத் பாபு தலைமையில் விசாரணை நடைபெற்றது. மேலும் இது தொடர்பாக பல மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் டெல்லி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். டெல்லி காவல் துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.