கோவை பெண்கள் சொன்னதை கேட்ட மாநகர காவல் துறை! பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த வருகிறது சூப்பர் கட்டமைப்பு!
- by David
- Mar 07,2025
இரவு நேரத்தில் பணியை முடித்து விட்டு தனியாக வீட்டுக்கு அல்லது மகளிர் விடுதிக்கு திரும்பும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கோவை மாநகர காவல் துறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில், மாநகரத்தில் எப்படிப்பட்ட வசதிகளை அமைத்து, பெண்களின் பாதுகாப்பை இன்னும் மேம்படுத்தலாம் என்கின்ற கருத்தை பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டிருந்தனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மக்கள், தங்கள் பரிந்துரைகளை கோவை மாநகர காவல் துறைக்கு தெரிவித்திருந்தனர். அவர்களில் கணிசமானவர்கள், பேருந்து நிறுத்துமிடங்களில் காவல்துறை தரப்பில் கண்காணிப்பு கேமரா வசதிகள் பொருத்தப்பட்டால் பெண்களின் பாதுகாப்பு மேம்படும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
மக்கள் கூறிய கருத்துக்களை செயல்படுத்தும் விதமாக, முதல் கட்டமாக கோவை மாநகரில் 200 பேருந்து நிறுத்தங்களில் (பஸ் ஸ்டாப்) ஸ்பீக்கர் வசதி கொண்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாப்களில் இந்தக் கட்டமைப்பை நிறுவுவதற்காக ஒரு கம்பம் அமைத்து அதில் இந்த கேமரா உடன் ஸ்பீக்கரும், ஒரு அவசர உதவி பட்டன்னும் பொருத்தப்படும். இந்த கேமரா அந்த பஸ் ஸ்டாப் பகுதி முழுவதையும் கண்காணிக்ககூடியதாக இருக்கும். மேலும் இது கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.
பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சம் ஏற்படும்படி நகர்வுகள் அங்கு இருந்தால், இந்த கேமரா அமைப்பில் வரக்கூடிய அவசர உதவி பட்டனை பயன்படுத்தி காவல்துறையினருடன் தங்கள் நிலை குறித்து விளக்க முடியும். அதற்காக இதில் மைக் வசதி இடம்பெறும்.
காவல்துறையினரும் பெண்களுடன் அங்கிருந்து இந்த ஸ்பீக்கர் மூலமாகவும் பேச முடியும். மேலும் அவர்கள் பாதுகாப்புக்காக உடனே ஒரு ரோந்து வாகனத்தை அங்கு அனுப்பி வைக்கவும் முடியும்.
முதல் கட்டமாக வரும் உலக மகளிர் தினத்தன்று கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி உதவி மூலம் முதல் கட்டமாக 200 பேருந்து நிறுத்தங்களில் இந்த வசதியை கொண்டு வர கோவை மாநகர காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.