கோவை மற்றும் சேலம் மாநகரங்களில் உள்ள சுமார் 80% பகுதிகள் மிதமான பூகம்பத்தினால் எளிதில் பாதிப்பு அடையக்கூடியவை என்பது அண்ணா பல்கலைகழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழக அரசின் நில அதிர்வு அபாய மதிப்பீடு பணிகளில் ஒன்றாக, 'Seismic Hazard Assessment and Microzonation of Salem and Coimbatore Cities' என்ற பெயரில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் மிதமான பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் உள்ளது. கோவை தெற்கு பகுதியை பொறுத்தவரை பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் நொய்யல் நதி, உக்கடம் குளம் மற்றும் சங்கனூர் ஓடை ஆகிய பகுதிகளை சுற்றி  அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களில் எவையெல்லாம் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றதோ  அந்த  கட்டிடங்களை மறுசீரமைப்பது அவசியம் எனவும் அதை செய்தால் தான் பூகம்பம் ஏற்பட்டால் அப்போது பாதிப்பு குறைவானதாக இருக்கும் என்றும், இனி கட்டப்படும் கட்டிடங்கள் பூகம்பங்களை எதிர்கொள்ளும் தன்மை கொண்டவையாக வடிவமைக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.