கூலி உயர்வு, மின் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று முதல் தொடங்கியுள்ளனர். இதனால் நாளொன்றுக்கு ரூ.40 கோடிக்கு மேல் காடா உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் விசைத்தறி தொழிலை நம்பி உள்ளனர். விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் இயங்காத நிலையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளொன்றுக்கு சுமார் ரூ.40 கோடிக்கு மேல் வர்த்தக இழப்பு நிகழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மின் கட்டண உயர்வுக்கு தீர்வு காண வேண்டும். கூலி உயர்வுக்கு சட்டப் பாதுகாப்புடன் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விசைத்தறியாளர்கள் பிரதானமாக முன்வைக்கின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால் புதிய கூலி உயர்வு கோரி வருவதாக தெரிவித்துள்ள விசைத்தறியாளர்கள் மின் கட்டணங்கள், கட்டட வாடகை, விசைத்தறி உதிரி பாகங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் அனைத்தும் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்