கோவை காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் நடைபெற்றுவரும் செம்மொழி பூங்கா திட்ட பணிகளுக்காக நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது மெல்ல செடிகளாக வளர்ந்து வருகிறது. முன்பு வெறும் மைதானமாக இருந்த இந்த பகுதி இப்போது பசுமையாக மாற துவங்கியுள்ளது.

செம்மொழி பூங்கா திட்டப்பணி 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் (45 ஏக்கர்), இரண்டாம் கட்டம் (120 ஏக்கர்) என பிரிக்கப்பட்டு, தற்போது முதல்கட்ட பணிகள் நடைபெறுகிறது.

முதல் கட்டத்தில் உள்ள 45 ஏக்கரில் 25 ஏக்கருக்கு 23 வகை தனித்துவமான தோட்டங்கள் அமைகிறது. இந்த பூங்காவில் மொத்தமாக 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்காக சமீபத்தில் சுமார் 60,000 மரக்கன்றுகள் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து பெறப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்த இடங்களில் செடிகள் நடப்பட்டு வருகிறது.

மீதம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் 1000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 300 கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி, செயற்கை நீரூற்று என மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன.

சென்ற மாத இறுதியில் இந்த திட்டம் 73% நிறைவேறியதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன. அந்த வகையில் தற்போது 75 முதல் 80%  பணிகள் நிறைவேறியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பூங்காவை மே மாதத்திற்குள் முடித்து, ஜூன் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது.