உலக அளவில் பிரபலமான இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தமிழகத்தில் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதற்கு கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் பொருட்களை பெருமளவு குவித்து வைக்க குடோன் உள்ளது.

இந்நிலையில் இந்த குடோனில்  இந்திய தர நிர்ணய அமைவினத்தின் கோயம்புத்தூர் அலுவலக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 95 லட்சம் மதிப்பிலான தரச் சான்று இல்லாத பொருட்களை இந்திய தர நிர்ணய அமைவன (BIS) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.

கைப்பற்ற பொருட்களில், ஆன்லைன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள், காற்றாடி, பொம்மைகள், குழந்தைகளுக்கான டயாபர், வாட்டர் ஹீட்டர், சிசிடிவி கேமராக்கள், காலனி உள்பட சுமார் 4500 பொருட்கள் இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.95 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆன்லைனில் வாங்கும்போது உரிய தரச் சான்று உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும் எனவும், ஐ.எஸ்.ஐ முத்திரை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

மேலும், BIS Care எனும் மொபைல் செயலியை பயன்படுத்தி பொருட்களின் பதிவு சான்றிதழ் மற்றும் தரத்தினை வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.