ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இருவர், ஆசிய பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிய பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி, சீனாவில் உள்ள குயிங்தவ் நகரில், வரும் பிப்ரவரி 11-ம் தேதி முதல் 16-ம் தேதி நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்க உள்ள லக்சயா சென் தலைமையிலான ஆண்கள் மற்றும் பி.வி.சிந்து தலைமையிலான பெண்கள் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.

இதன்படி ஆண்கள் பிரிவில் கே.சதீஷ்குமார், பெண்கள் பிரிவில் ஆத்யா வாரியாத் ஆகியோர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இருவரும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிய பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர், பாராட்டி வாழ்த்தினார். கல்லூரியின்  முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.